பொய்கையாழ்வார் அருளிச் செய்த முதல் திருவந்தாதி
குறிப்பு : இரண்டு முறை சேவிக்க வேண்டியவற்றை # என்னும் குறியால் அறியவும்.
தனியன்
முதலியாண்டான் அருளிச் செய்தது
நேரிசை வெண்பா
கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த,
பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு,-வையத்து
அடியவர்கள் வாழ அருந்தமிழந் தாதி,
படிவிளங்கச் செய்தான் பரிந்து.
இயற்பா
முதல் திருவந்தாதி
2082
வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக,-செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று.#
1
2083
என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,
ஒன்று மதனை யுணரேன்நான்,-அன்ற
தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ
படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்.
2
2084
பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த,
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே,-சூருருவில்
பேயளவி கண்ட பெருமான்* அறிகிலேன்,
நீயளவு கண்ட நெறி.
3
2085
நெறிவாசல் தானேயாய் நின்றானை, ஐந்து
பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி,-அறிவானாம்
ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த,
ஆலமமர் கண்டத் தரன்.
4
2086
அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள் ளூர்தி,
உரைநூல் மறையுறையும் கோயில்,-வரைநீர்
கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி,
உருவமெரி கார்மேனி ஒன்று.
5
2087
ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,
இன்று மறப்பனோ ஏழைகாள்,-அன்று
கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை.
6
2088
திசையும் திசையுறு தெய்வமும், தெய்வத்
திசையுங் கருமங்க ளேல்லாம்,-அசைவில்சீர்க்
கண்ணன் நெடுமால் கடல்கடைந்த, காரோத
வண்ணன் படைத்த மயக்கு.
7
2089
மயங்க வலம்புரி வாய்வைத்து, வானத்
தியங்கும் எறிகதிரோன் றன்னை,-முயங்கமருள்
தேராழி யால்மறைத்த தென்நீ திருமாலே,
போராழிக் கையால் பொருது?
8
2090
பொருகோட்டோர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன்
ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றே,-விரிதோட்ட
சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க,
மாவடியின் நீயளந்த மண்?
9
2091
மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,
விண்ணும் விழுங்கியது மெய்யென்பர்,-எண்ணில்
அலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ்
வுலகளவு முண்டோவுன் வாய்?
10
2092
வாயவனை யல்லது வாழ்த்தாது, கையுலகம்
தாயவனை யல்லது தாம்தொழா,-பேய்முலைநஞ்
சூணாக வுண்டான் உருவொடு பேரல்லால்,
காணாகண் கேளா செவி.
11
2093
செவிவாய்கண் மூக்குடலென் றைம்புலனும், செந்தீ
புவிகால்நீர் விண்பூதம் ஐந்தும்,-அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே,
ஏனமாய் நின்றாற் கியல்வு.
12
2094
இயல்வாக ஈன்துழா யானடிக்கே செல்ல,
முயல்வார் இயலமரர் முன்னம்,-இயல்வாக
நீதியா லோதி நியமங்க ளால்பரவ,
ஆதியாய் நின்றார் அவர்.
13
2095
அவரவர் தாந்தம் அறிந்தவா றேத்தி,
இவாpவ ரெம்பெருமா னென்று,-சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர், உலகளந்த
மூர்த்தி யுருவே முதல்.
14
2096
முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும்
முதலாவான் மூரிநீர் வண்ணன்,-முதலாய
நல்லான் அருளல்லால் நாமநீர் வையகத்து,
பல்லார் அருளும் பழுது.
15
2097
பழுதே பலபகலும் போயினவென்று, அஞ்சி
அழுதேன் அரவணைமேல் கண்-தொழுதேன்,
கடலோதம் காலலைப்பக் கண்வளரும், செங்கண்
அடலோத வண்ணர் அடி.
16
2098
அடியும் படிகடப்பத் தோள்திசைமேல் செல்ல,
முடியும் விசும்பளந்த தென்பர்,-வடியுகிரால்
ஈ.ர்ந்தான் இரணியன தாகம், இருஞ்சிறைப்புள்
ஊர்ந்தா னுலகளந்த நான்று.
17
2099
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய்
தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை-ஊன்றி,
பொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்,
மருதிடைபோய் மண்ணளந்த மால்.
18
2100
மாலுங் கருங்கடலே* என்நோற்றாய், வையகமுண்
டாலின் இலைத்துயின்ற ஆழியான்,-கோலக்
கருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றும்
திருமேனி நீதீண்டப் பெற்று*
19
2101
பெற்றார் தளைகழலப் பேர்ந்தோர் குறளுருவாய்,
செற்றார் படிகடந்த செங்கண்மால்,-நற்றா
மலைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி,
நிரைமலர்கொண்டு (*)ஏத்துவரால் நின்று.

(*) ஏத்துவராம் என்றும் பாடம்.
20
2102
நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்,
சென்று திசையளந்த செங்கண்மாற்கு,-என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்,
அடையாழி நெஞ்சே* அறி.
21
2103
அறியு முலகெல்லாம் யானேயு மல்லேன்,
பொறிகொள் சிறையுவண மூர்ந்தாய்,-வெறிகமழும்
காம்பேய்மென் தோளி கடைவெண்ணெ யுண்டாயை,
தாம்பேகொண் டார்த்த தழும்பு.
22
2104
தழும்பிருந்த சார்ங்கநாண் தோய்ந்தவா மங்கை,
தழும்பிருந்த தாள்சகடம் சாடி,-தழும்பிருந்த
பூங்கோதை யாள்;வெருவப் பொன்பெயரோன் மார்பிடந்த,
வீங்கோத வண்ணர் விரல்.
23
2105
விரலோடு வாய்தோய்ந்த வெண்ணெய்கண்டு, ஆய்ச்சி
உரலோ டுறப்பிணித்த ஞான்று,-குரலோவா
தேங்கி நினைந்தயலார் காண இருந்திலையே?,
ஓங்கோத வண்ணா* உரை.
24
2106
உரைமேற்கொண் டென்னுள்ளம் ஓவாது எப்போதும்
வரைமேல் மரதகமே போல,-திரைமேல்
கிடந்தானைக் கீண்டானை, கேழலாய்ப் பூமி
இடந்தானை யேத்தி யெழும்.
25
2107
எழுவார் விடைகொள்வார் ஈ.ன்துழா யானை,
வழுவா வகைநினைந் வைகல்-தொழுவார்,
வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, வானோர்
மனச்சுடரைத் தூண்டும் மலை.
26
2108
மலையால் குடைகவித்து மாவாய் பிளந்து,
சிலையால் மராமரமேழ் செற்று,-கொலையானைப்
போர்க்கோ டொசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்,
காக்கோடு பற்றியான் கை.
27
2109
கைய வலம்புரியும் நேமியும், கார்வண்ணத்
தைய* மலர்மகள்நின் னாகத்தாள்,-செய்ய
மறையான்நின் உந்தியான் மாமதிள்மூன் றெய்த
இறையான்நின் ஆகத் திறை.
28
2110
இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்,
அறைபுனலும் செந்தீயு மாவான்,-பிறைமருப்பின்
பைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த,
செங்கண்மால் கண்டாய் தெளி.
29
2111
தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ, ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை,-எளிதாகத்
தாய்நாடு கன்றேபோல் தண்டுழா யானடிக்கே,
போய்நாடிக் கொள்ளும் புரிந்து.
30
2112
புரியொருகை பற்றியோர் பொன்னாழி யேந்தி,
அரியுருவும் ஆளுருவு மாகி,-எரியுருவ
வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை அல்லால்,மற்
றெண்ணத்தா னாமோ இமை?
31
2113
இமையாத கண்ணால் இருளகல நோக்கி,
அமையாப் பொறிபுலன்க ளைந்தும்-நமையாமல்,
ஆகத் தணைப்பா ரணைவரே, ஆயிரவாய்
நாகத் தணையான் நகர்.
32
2114
நகர மருள்புரிந்து நான்முகற்கு,பூமேல்
பகர மறைபயந்த பண்பன்,-பெயாpனையே
புந்தியால் சிந்தியா தோதி உருவெண்ணும்,
அந்தியா லாம்பயனங் கென்?
33
2115
என்னொருவர் மெய்யென்பர் ஏழுலகுண்டு, ஆலிலையில்
முன்னொருவ னாய முகில்வண்ணா,-நின்னுருகிப்
பேய்த்தாய் முலைதந்தாள் பேர்ந்திலளால், பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலைதந்த ஆறு?
34
2116
ஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால்,
கூறிய குற்றமாக் கொள்ளல்நீ-தேறி,
நெடியோய்* அடியடைதற் கன்றே,ஈ ரைந்து
முடியான் படைத்த முரண்?
35
2117
முரணை வலிதொலைதற் காமன்றே, முன்னம்
தரணி தனதாகத் தானே,-இரணியனைப்
புண்நிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால்,நீ
மண்ணிரந்து கொண்ட வகை?
36
2118
வகையறு நுண்கேள்வி வாய்வார்கள், நாளும்
புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி,-திசைதிசையின்
வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே, வெண்சங்கம்
ஊதியவாய் மாலுகந்த வூர்.
37
2119
ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை,
பேர எறிந்த பெருமணியை,-காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேலசுரர்
(*)என்னென்ற மால திடம்.

(*) என்மென்னு என்றும் பாடம்.
38
2120
இடந்தது பூமி எடுத்தது குன்றம்,
கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச,-கிடந்ததும்
நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே,
பேரோத வண்ணர் பெரிது.
39
2121
பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ
வெருவிப் புனம்துறந்த வேழம்,-இருவிசும்பில்
மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே, மேலசுரர்
கோன்வீழக் கண்டுகந்தான் குன்று.
40
2122
குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே,-என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு.
41
2123
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவா றென்கொல்,-திருமகள்மேல்
பாலோதம் சிந்தப் படநா கணைக்கிடந்த,
மாலோத வண்ணர் மனம்?
42
2124
மனமாசு தீரு (*)மறுவினையும் சாரா,
தனமாய தானேகை கூடும்.,-புனமேய
பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி,
தாம்தொழா நிற்பார் தமர்.

(*) மருவினையும் என்றும் பாடம்.
43
2125
தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,
தமருகந்த தெப்பேர்மற் றப்பேர்,-தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,
அவ்வண்ணம் ஆழியா னாம்.
44
2126
ஆமே யமரர்க் கறிய? அதுநிற்க,
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே,-பூமேய
மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியை,
பாதமத்தா லெண்ணினான் பண்பு.
45
2127
பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற,
வெண்புரிநூல் மார்பன் வினைதீர,-புண்புரிந்த
ஆகத்தான் தாள்பணிவார் கண்டீர், அமரர்தம்
போகத்தால் பூமியாள் வார்.
46
2128
வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்,
சேரி திரியாமல் செந்நிறீஇ,-கூரிய
மெய்ஞ்ஞானத் தாலுணர்வார் காண்பரே, மேலொருநாள்
கைந்நாகம் காத்தான் கழல்.
47
2129
கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல்,
சுழலும் சுராசுரர்க ளஞ்ச,-அழலும்
செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல,
மருவாழி நெஞ்சே* மகிழ்.
48
2130
மகிழல கொன்றேபோல் மாறும்பல் யாக்கை,
நெகிழ முயல்கிற்பார்க் கல்லால்,-முகில்விரிந்த
சோதிபோல் தோன்றும் சுடர்பொன் நெடுமுடி,எம்
ஆதிகாண் பார்க்கு மரிது.
49
2131
அரியபுல னைந்தடக்கி யாய்மலர்கொண்டு, ஆர்வம்
புரியப் பரிசினால் புல்கில்,-பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலிபால், வண்கைநீர்
ஏற்றானைக் காண்ப தெளிது.
50
2132
எளிதி லிரண்டையும் காண்பதற்கு, என்னுள்ளம்
தெளியத் தெளிந்தொழியும் செவ்வே,-களியில்
பொருந்தா தவனைப் பொரலுற்று, அரியாய
இருந்தான் திருநாமம் எண்.
51
2133
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்,
வண்ண மலரேந்தி வைகலும்,-நண்ணி
ஒருமாலை யால்பரவி ஓவாது,எப் போதும்
திருமாலைக் கைதொழுவர் சென்று.
52
2134
சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள்கடலுள்,-என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம், திருமாற் கரவு.
53
2135
அரவம் அடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய்
குரவை குடம்முலைமல் குன்றம்,-கரவின்றி
விட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டுகோத் தாடி,உண்
டட்டெடுத்த செங்கண் அவன்.
54
2136
அவன்தமர் எவ்வினைய ராகிலும், எங்கோன்
அவன்தமரே யென்றொழிவ தல்லால்,-நமன்தமரால்
ஆராயப் பட்டறியார் கண்டீர், அரவணைமேல்
பேராயற் காட்பட்டார் பேர்.
55
2137
பேரே வரப்பிதற்றல் அல்லாலெம் பெம்மானை,
ஆரே அறிவார்? அதுநிற்க,-நேரே
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான், கண்ணன்
அடிக்கமலந் தன்னை அயன்.
56
2138
அயல்நின்ற வல்வினையை அஞ்சினே னஞ்சி,
உயநின் திருவடியே சேர்வான்,-நயநின்ற
நன்மாலை கொண்டு 'நமோநார ணா'என்றும்
சொன்மாலை கற்றேன் தொழுது.
57
2139
தொழுது மலர்கொண்டு தூபம்கை யேந்தி,
எழுதும் எழுவாழி நெஞ்சே,-பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்,
அந்தரமொன் றில்லை அடை.
58
2140
அடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம்
மிடைந்தவை மீண்டொழிய வேண்டில்,-நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரணழிய, முன்னொருநாள்
தன்வில்அங்கை வைத்தான் சரண்.
59
2141
சரணா மறைபயந்த தாமரையா னோடு,
மரணாய மன்னுயிர்கட் கெல்லாம்,-அரணாய
பேராழி கொண்ட பிரானன்றி மற்றியாது,
ஓராழி சூழ்ந்த வுலகு.
60
2142
உலகும் உலகிறந்த வூழியும், ஒண்கேழ்
விலகு கருங்கடலும் வெற்பும்,-உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும், திருமால்தன்
புந்தியி லாய புணர்ப்பு.
61
2143
புணர்மருதி னூடுபோய்ப் பூங்குருந்தம் சாய்த்து,
மணமருவ மால்விடையேழ் செற்று,-கணம்வெருவ
ஏழுலகும் தாயினவும் எண்டிசையும் போயினவும்,
சூழரவப் பொங்கணையான் தோள்.
62
2144
தோளவனை யல்லால் தொழா,என் செவியிரண்டும்,
கேளவன தின்மொழியே கேட்டிருக்கும்,-நாநாளும்
கோணா கணையான் குரைகழலே கூறுவதே,
நாணாமை நள்ளேன் நயம்.
63
2145
நயவேன் பிறர்பொருளை நள்ளேன்கீ ழாரோடு,
உயவேன் உயர்ந்தவரோ டல்லால்,-வியவேன்
திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்,
வருமாறென் நம்மேல் வினை?
64
2146
வினையா லடர்ப்படார் வெந்நரகில் சேரார்,
தினையேனும் தீக்கதிக்கட் செல்லார்,-நினைதற்
கரியானைச் சேயானை, ஆயிரம்பேர்ச் செங்கட்
கரியானைக் கைதொழுதக் கால்.
65
2147
காலை யெழுந்துலகம் கற்பனவும், கற்றுணர்ந்த
மேலைத் தலைமறையோர் வேட்பனவும்,-வேலைக்கண்
ஓராழி யானடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்,
பேராழி கொண்டான் பெயர்.
66
2148
பெயரும் கருங்கடலே நோக்குமாறு, ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும்,-உயிரும்
தருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன்,
ஒருவனையே நோக்கும் உணர்வு.
67
2149
உணர்வாரா ருன்பெருமை? யூழிதோ றூழி,
உயர்வாரா ருன்னுருவந் தன்னை?,-உணர்வாரார்
விண்ணகத்தாய்* மண்ணகத்தாய்* வேங்கடத்தாய், நால்வேதப்
பண்ணகத்தாய்* நீகிடந்த பால்?
68
2150
பாலன் றனதுருவாய் ஏழுலகுண்டு, ஆலிலையின்
மேலன்று நீவளர்ந்த மெய்யென்பர்,-ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணமோ மண்ணதோ?,
சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு.
69
2151
சொல்லுந் தனையும் தொழுமின் விழுமுடம்பு,
செல்லுந் தனையும் திருமாலை,-நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்,
நாமத்தால் ஏத்துதிரேல் நன்று.
70
2152
நன்று பிணிமூப்புக் கையகற்றி நான்கூழி,
நின்று நிலமுழுதும் ஆண்டாலும்,-என்றும்
விடலாழி நெஞ்சமே* வேண்டினேன் கண்டாய்,
அடலாழி கொண்டான்மாட் டன்பு.
71
2153
அன்பாழி யானை யணுகென்னும், நாஅவன்றன்
பண்பாழித் தோள்பரவி யேத்தென்னும்,-முன்பூழி
காணானைக் காணென்னும் கண்செவி கேளென்னும்,
பூணாரம் பூண்டான் புகழ்.
72
2154
புகழ்வாய் பழிப்பாய்நீ பூந்துழா யானை,
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே,-திகழ்நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்,
உடலும் உயிருமேற் றான்.
73
2155
ஏற்றான்புள் ளூர்ந்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான்,-கூற்றொருபால்
மங்கையான் பூமகளான் வார்சடையான், நீண்முடியான்
கங்கையான் நீள்கழலான் காப்பு.
74
2156
காப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள்,
ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும்,-மூப்புன்னைச்
சிந்திப்பார்க் கில்லை திருமாலே, நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி.
75
2157
வழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா
மொழிநின்ற மூர்த்தியரே யாவர்,-பழுதொன்றும்
வாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த
சீரான் திருவேங் கடம்.
76
2158
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும்,-நான்கிடத்தும்
நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,
என்றால் கெடுமாம் இடர்.
77
2159
இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம்
தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த,-படமுடை
பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்,
கொய்ந்நாகப் பூம்போது கொண்டு.
78
2160
கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்,
'மண்தா' எனவிரந்து மாவலியை,-ஒண்தாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில்
ஆரங்கை தோய அடுத்து?
79
2161
அடுத்த கடும்பகைஞர்க் காற்றேனென் றோடி,
படுத்த பெரும்பாழி சூழ்ந்த-விடத்தரவை,
வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு,
அல்லாதும் ஆவரோ ஆள்?
80
2162
ஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று,
வாளமர் வேண்டி வரைநட்டு,-நீளரவைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே, தொன்னரகைப்
பற்றிக் கடத்தும் படை?
81
2163
படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள், பைம்பூந்
தொடையலோ டேந்திய தூபம்,-இடையிடையின்
மீன்மாய மாசூணும் வேங்கடமே, மேலொருநாள்
மான்மாய எய்தான் வரை.
82
2164
வரைகுடைதோள் காம்பாக ஆநிரைகாத்து, ஆயர்
நிரைவிடையேழ் செற்றவா ரென்னே,-உரவுடைய
நீராழி யுள்கிடந்து நேரா நிசாசரர்மேல்,
பேராழி கொண்ட பிரான்?
83
2165
பிரான்* உன் பெருமை பிறரா ரறிவார்?,
உராஅ யுலகளந்த ஞான்று,-வராகத்
தெயிற்றளவு போதாவா றென்கொலோ, எந்தை
அடிக்களவு போந்த படி?
84
2166
படிகண் டறிதியே பாம்பணையி னான்,புட்
கொடிகண் டறிதியே? கூறாய்,-வடிவில்
பொறியைந்து முள்ளடக்கிப் போதொடுநீ ரேந்தி,
நெறிநின்ற நெஞ்சமே* நீ.
85
2167
நீயும் திருமளும் நின்றாயால், குன்றெடுத்துப்
பாயும் பனிமறைத்த பண்பாளா,-(*)வாயில்
கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல்
இடைகழியே பற்றி யினி.

(*) வாசல் என்றும் பாடம்.
86
2168
இனியார் புகுவா ரெழுநரக வாசல்?
முனியாது மூரித்தாள் கோமின்,-கனிசாயக்
கன்றெறிந்த தோளான் கனைகழலே காண்பதற்கு,
நன்கறிந்த நாவலம்சூழ் நாடு.
87
2169
நாடிலும் நின்னடியே நாடுவன், நாடோறும்
பாடிலும் நின்புகழே பாடுவன்,-சூடிலும்
பொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு,
என்னாகி லென்னே எனக்கு.
88
2170
எனக்காவா ராரொருவ ரே,எம் பெருமான்
தனக்காவான் தானேமற் றல்லால்,-புனக்காயாம்
பூமேனி காணப் பொதியவிழும் பூவைப்பூ,
மாமேனி காட்டும் வரம்.
89
2171
வரத்தால் வலிநினைந்து மாதவ*நின் பாதம்,
சிரத்தால் வணங்கானா மென்றே,-உரத்தினால்
ஈரரியாய் நேர்வலியோ னாய இரணியனை,
ஓரரியாய் நீயிடந்த தூன்?
90
2172
ஊனக் குரம்பையி னுள்புக் கிருள்நீக்கி,
ஞானச் சுடர்கொளீஇ நாடோறும்,-ஏனத்
துருவா யுலகிடந்த வூழியான் பாதம்,
மருவாதார்க் குண்டாமோ வான்?
91
2173
வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்,
தேனாகிப் பாலாம் திருமாலே,-ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள்
மண்ணை உமிழ்ந்த வயிறு?
92
2174
வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக வாய்மடுத்த தென்நீ,-பொறியுகிரால்
பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா,நின்
சேவடிமே லீடழியச் செற்று?
93
2175
செற்றெழுந்த தீவிழித்துச் சென்றவிந்த ஏழுலகும்,
மற்றிவையா வென்றுவா யங்காந்து,-முற்றும்
மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால்,
இறையேனும் ஏத்தாதென் நா.
94
2176
நாவாயி லுண்டே 'நமோநார ணா'என்று,
ஓவா துரைக்கு முடையுண்டே,-மூவாத
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே, என்னொருவர்
தீக்கதிக்கட் செல்லும் திறம்?
95
2177
திறம்பாதென் னெஞ்சமே* செங்கண்மால் கண்டாய்,
அறம்பாவ மென்றிரண்டு மாவான்,-புறந்தானிம்
மண்தான் மறிகடல்தான் மாருதந்தான், வான்தானே,
கண்டாய் கடைக்கட் பிடி.
96
2178
பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன்
அடிசேர்ந் தருள்பெற்றாள் அன்றே,-பொடிசேர்
அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த,
புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்?
97
2179
பொன்திகழு மேனிப் புரிசடையம் புண்ணியனும்,
நின்றுலகம் தாய நெடுமாலும்,-என்றும்
இருவரங்கத் தால்திரிவ ரேலும், ஒருவன்
ஒருவனங்கத் தென்று முளன்.
98
2180
உளன்கண்டாய் நன்னெஞ்சே* உத்தமன் என்றும்
உளன்கண்டாய், உள்ளூவா ருள்ளத்-துளன்கண்டாய்,
வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்,
உள்ளத்தி னுள்ளானென் றோர்.
99
2181
ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்,
ஈரடியும் காணலா மென்நெஞ்சே*-ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர்,
மாயவனை யேமனத்து வை.#
100
பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com